அமைச்சர் பிடிஆர் ஆடியோ தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை நடுக்குப்பத்தில் நடைபெற்ற மனதின் குரல் திரையிடல் நிகழ்ச்சியில், மனதின் குரல் உரையில் பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாடு குறித்து பேசிய கருத்துகளை புத்தகமாக கே. அண்ணாமலை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, இதுவரை நடைபெற்ற 99 மனதின் குரல் நிகழ்ச்சிகளிலும், பிரதமர் மோடி தமிழர்களுக்கு மிக முக்கிய இடத்தை கொடுத்துள்ளார்.
100வது நிகழ்ச்சியிலும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியுள்ளார். திமுகவுக்கு எதிரான மனநிலையை எப்படி வாக்குகளாக மாற்றுவது என்பதுதான் எங்களின் நோக்கம்.
தமிழ்நாட்டில் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகதான், ஆனால் கூட்டணியின் முகம் மோடிதான். ஊழலுக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.
அமைச்சர் பிடிஆர் ஆடியோ தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.