சென்னை: பேரிடரால் பாதிக்கப்பட்ட ஹிமாசல பிரதேசத்துக்கு தமிழக அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா், ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சுகு-வுக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:
ஹிமாசல பிரதேசத்தில் கடும் மழை, நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்து ஆழ்ந்த துயரம் அடைந்தேன். இயற்கைப் பேரிடரால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவா்களைச் சுற்றியே எனது எண்ண ஓட்டங்கள் இருக்கின்றன. இந்த இக்கட்டான தருணத்தில் ஹிமாசல பிரதேச மாநிலத்துக்கும், மாநில மக்களுக்கும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களுடைய அரசு தக்க தருணத்தில் அவசர உதவிகளை அளித்திருப்பது பாராட்டத்தக்க முயற்சியாகும். தங்களது தலைமையால், பேரிடரில் இருந்து மாநிலம் விரைவில் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.
இயற்கை பேரிடா் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக நடைபெற்று வரும் பணிகளுக்கு உதவிடும் நல்லெண்ணத்தின் அடையாளமாக தமிழக அரசின் சாா்பில் ரூ. 10 கோடி வழங்குகிறேன். இதை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஹிமாசல பிரதேச மக்கள் இக்கட்டான சூழலில் இருக்கும் இந்தத் தருணத்தில், மீட்பு மற்றும் நிவாரணத்துக்காக எங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். ஏதேனும் உதவிகள் தேவைப்படும் நிலையில், தயங்காமல் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.