சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று முதல் செப். 1-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தமிழகத்தில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, அமைந்தகரை, கோயம்பேடு, கே.கே. நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், வானகரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.