தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்காமல் அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கும் கட்டணங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசின் சிஏஜி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக ஆகஸ்ட் 2019 - ஜூன் 2020 காலகட்டத்தில் மட்டும் பரனூர் சுங்கச்சாவடி வழியாக மொத்தம் 1.17 கோடி வாகனங்கள் சென்றுள்ளது. இதில், விஐபி பிரிவில் 62.37 லட்சம்(53.27 சதவிகிதம்) வாகனங்கள் சென்றுள்ளதாகவும், அதற்கான கட்டணங்கள் வசூலிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக சென்ற 88.92 லட்சம் வாகனங்களில் 32.39 லட்சம்(36.43 சதவிகிதம்) வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கவில்லை.
மேலும், ஜனவரி 2020 - செப்டம்பர் 2020 காலகட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியில் 25.08%, லெம்பலகுடி சுங்கசாவடியில் 18.32%, செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 12.60, கனியூர் சுங்கசாவடியில் 11.12% வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் தகவல்படி, பரனூர் சுங்கச்சாவடி வழியாக 10-இல் 5 விஐபி வாகனங்கள் செல்கின்றனவா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.