தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் குறித்து அறிந்துகொள்வதற்காக தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது.
சென்னை ராயபுரத்திலுள்ள அரசுப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து அறிந்துகொண்டனர்.
தெலங்கானா முதல்வரின் தனிச்செயலாளர் சுனிதா, அரசு செயலாளர் கிறிஸ்டீனா, சிறப்புப் பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர், உள்ளிட்ட அதிகாரிகள் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தனர்.
சென்னை ராயபுரத்திலுள்ள உணவுக் கூடத்தில், காலை உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, என்னென்ன உணவுகள் தயாரிக்கப்படுகின்றன, எவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது என்பதை கேட்டறிந்தனர்.
தமிழகத்தின் காலை உணவுத் திட்ட சிறப்பு அதிகாரியான இளம்பகவத், காலை உணவுத் திட்டம் குறித்து தெலங்கானா அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை நேரில் பார்வையிட உள்ளனர்.