சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சனிக்கிழமை(டிச.2) நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல், கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் இரண்டாம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
இந்த நிலையில், புயல், கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை சென்னையில் புயல், கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, டிசம்பர் 2-ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இந்த விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.