சென்னை: சென்னையில் பனிமூட்டம் நிலவுவதால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ‘மிக்ஜம்’ புயலால் கடந்த ஞாயிறு இரவுமுதல் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை விமான சேவை பாதிக்கப்பட்டது.
புதன்கிழமையும் பயணிகளின் எண்ணிக்கை குறைவு மற்றும் விமானிகள் பணிக்கு வராத காரணத்தால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் வில்லிவாக்கம், அயனாவரம், எழும்பூர், நுங்கம்பாக்கம், ஐயப்பாக்கம், போரூர், கிண்டி, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது.
இதனால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலேயே விமானங்கள் வட்டமிடும் சூழல் ஏற்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து மதுரை, கோவை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.