சென்னை புயல் பாதிப்பு: மு.க. ஸ்டாலின், ராஜ்நாத் சிங் கூட்டாகப் பேட்டி!

தமிழக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 
செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலின்.
செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலின்.

தமிழக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(வியாழக்கிழமை) காலை சென்னை வந்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் அவரை வரவேற்றனர். 

தொடர்ந்து அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்ஜம் புயல் பாதிப்புகளை ராணுவ ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் சென்றார். 

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் புயல் பாதிப்பு, எடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

இதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'இந்த பெருவெள்ளத்தில் இருந்து மீண்டு சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த பெருமழையிலும் உயிரிழப்புகளும், பொருட்சேதமும் குறைக்கப்பட்டுள்ளது. 

சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் போன்ற பொது கட்டமைப்புகளை சீர்செய்வதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ரூ. 5,060 கோடி வழங்கிடுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 450 கோடி வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளேன். மத்திய அரசின் குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு வரவுள்ளது. தமிழக அரசுக்கு உரிய நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருக்கிறார். விரைவில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பேசினார். 

இதன்பின்னர் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டது அறிந்து பிரதமர் மோடி கவலையுற்றார். தமிழக மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு செய்யும்.

பிரதமரிடம் நான் தனிப்பட்ட முறையில் இதுகுறித்து பேசி கண்காணிக்குமாறு கூறியிருக்கிறேன். ராணுவம், கடற்படை, தேசிய மீட்புப்படை என அனைத்துத் துறையினரும் தீவிரமாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நானும் சென்னையில் ஆய்வு செய்த பின்னர், முதல்வரை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தேன். 

தமிழக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமரின் சார்பில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். 

வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 450 கோடி மட்டுமின்றி சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கும் மத்திய அரசு ரூ. 561 கோடி நிதி வழங்கியுள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com