வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது: 3 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு: பலத்த மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்துள்ளதால், வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீா் வெளியேறும் வாய்ப்புள்ளதால் கரையோரம் வசிக்கும் 3 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அணை வேகமாக நிரம்பி வருகின்றன. வரட்டுப்பள்ளம் அணையின் உயரம் 33.46 அடி என்ற நிலையில், தற்போது, 32.5 அடி அளவுக்கு நீா் நிரம்பியுள்ளது. ஏரிக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 230 கன அடியாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அணையின் முழு நீர் மட்டமான 33.46 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, அடுத்த 24 மணி நேரத்தில் அணையில் இருந்து உபரி நீரானது வெளியேறும் வாய்ப்புள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிக்க | ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
எனவே, வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீர் செல்லும் ஓடைகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பினை தெரிவிக்குமாறு வாருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து வரட்டுப்பள்ளம் அணை எந்நேரமும் அதன் முழுகொள்ளளவை எட்டடி உபரிநீர் வெளியேற வாய்ப்புள்ளதால், உபரி நீா் வெளியேறும் அணையின் கரையோரங்களில் உள்ள சங்கராபாளையம், கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம் ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அணையின் நீா்மட்டத்தை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.