புயல் நிவாரண நிதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவர்: செல்வப்பெருந்தகை
மிக்ஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மிக்ஜம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளப் பாதிப்புகளால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சிறப்பான முறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மிட்புப் பணிக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபட்டு படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாவண நிதிக்கு அளிக்கின்றோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.