சென்னையில் 19 இடங்களில் மட்டும் மழைநீர் அகற்றப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இரவு பகலாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. சென்னை நகரம் கிட்டதட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.
குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 400க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் 6 இடங்களில் மட்டும்தான் வகுப்பறைகள் தூய்மை செய்யப்படவில்லை.
கழிவறைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் வந்த 2,500 பணியாளர்கள் சென்னையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிச.11 திங்கட்கிழமைக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.6,000 கொடுப்பதை மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.