சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்யும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்த நிலையில், அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, கடந்த மாத மின்கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த நிலையில், புயல் பாதிப்பு காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.