
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-ஆவது ஆராதனை விழா ஜனவரி 26-ஆம் தேதி தொடங்குவதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரமம் வளாகத்தில் பந்தல் கால் நடும் விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரமம் வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் எஸ்.சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டு வைத்தனர்.
இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மத்தியக் குழு சந்திப்பு!
திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 177 -ஆவது ஆராதனை விழாவுக்காக வியாழக்கிழமை காலை பந்தல் காலை நட்டு வைத்த ஸ்ரீ தியாகபிரம்மம மகோற்சவ சபா அறங்காவலர் எஸ். சுரேஷ் மூப்பனார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுரேஷ் மூப்பனார் தெரிவித்தது:
திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 177-ஆவது ஆராதனை மகோத்சவ விழா ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கி 30 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 30-ஆம் தேதி ஆராதனை விழா நடைபெறுகிறது. இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்த விழாவில் தேசிய நிகழ்ச்சியாக ஜனவரி 27-ஆம் தேதி இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை அகில இந்திய வானொலியில் நேரலையாக ஒலிபரப்பப்படும்.
ஜனவரி 26 -ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் சபா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என சுரேஷ் மூப்பனார் தெரிவித்தார்.
பந்தல் கால் நடும் விழாவில் சபா அறங்காவலர்கள் சி.மிதுன் மூப்பனார், எம்.ஆர்.பஞ்சநதம்,டெக்கான் என்.கே.மூர்த்தி, என்.ஆர். நடராஜன், உதவிச் செயலர் டி.ஆர். கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.