எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து அதுகுறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி ரூ 100 கோடி மான நஷ்டஈடு கோரி தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், காவல் துறை அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
தோனி தாக்கல் செய்த மனுவில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிடப்பட்ட கருத்துகள், நீதிமன்றங்களைக் களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித் துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்குரைஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளதாகவும் தோனி தனது மனுவில் கூறியிரருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளதாக கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.