தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளை பார்வையிட்டார்.
மேலும் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், பொட்டல்புதூரில் உள்ள நிவாரண முகாமில் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
தென்மாவட்டங்களில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | நெல்லை செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்!