தொடர் கனமழையால் தென் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) மாலை நெல்லை செல்கிறார்.
தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக, நெல்லை மாநகர் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) மாலை நெல்லை செல்கிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்பேரில் உதயநிதி நெல்லை செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.