விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்திய அனைவருக்கும் அவரது மனைவி பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்திய அனைவருக்கும் எனது நன்றி. விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த தீவுத்திடலில் இடம் ஒதுக்கித் தந்த தமிழக அரசுக்கு நன்றி. விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்களுக்கும் நன்றி. முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை உள்பட அனைவருக்கும் நன்றி.
இதையும் படிக்க- விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
தீவுத்திடலில் ஒரே இரவில் அஞ்சலிக்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து தந்ததற்கு நன்றி. கேப்டன் விஜயகாந்தின் நல்ல குணமே இன்று கூடிய கூட்டத்திற்கு காரணம். தமிழகத்தில் இந்தளவிற்கு வேறு எந்த தலைவருக்கும் இப்படி கூட்டம் கூடியதில்லை. தேமுதிக கட்சியின் மோதிரம், கட்சித் துண்டு அணிவித்தபடி கேப்டன் விஜயகாந்தை நல்லடக்கம் செய்துள்ளோம். கேப்டன் விஜயகாந்தின் லட்சியத்தை நாம் நிறைவேற்ற சூளுரைப்போம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக வீடு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தேமுதிக தலைவரும், எதிா்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானாா். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் கோயம்பேடு தேமுதிக அலுவலக வளாகத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.