ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார்.
சற்று முன்பு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை செய்த நிலையில், இபிஎஸ் தரப்புக்கு பாஜக ஆதரவு தெரிவிக்கும் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இந்த இரு சந்திப்புகளைத் தொடர்ந்து எந்த தரப்புக்கு ஆதரவு அளிப்பது என்று செய்தியாளர் சந்திப்பின்போது அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை அறிவிப்பார் எனவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து பாஜக தலைமை அறிவிக்கும் என்று முன்பு கூறப்பட்ட நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை தில்லி பயணம் மேற்கொண்டார்.
தில்லியிருந்து அவர் சென்னை திரும்பிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்தார். அந்த சந்திப்பின்போது இபிஎஸ் ஆதரவாளரான டி.ஜெயக்குமார், பாஜகவைச் சேர்ந்த சி.டி. ரவி, கரு. நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓ,பன்னீர்செல்வம் தரப்பையும் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பிலும் சி.டி. ரவி, கரு. நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஓபிஎஸ் தரப்பினர் வரவேற்றனர்.
இரு தரப்பு சந்திப்புகளைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.