திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி நெற்பயிர்களும், விதைக்கப்பட்ட உளுந்து, பச்சைப் பயிர், தானியங்களும் பருவம் தவறி பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழு இழப்பீடு தொகை கிடைக்க உறுதி செய்ய வேண்டும். மழைச் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட நெல்லில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் நிலையங்களில் அனுமதிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லெட்சுமாங்குடி பாலத்தருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் கே.தவபாண்டியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பெ.முருகேசு, நகர் மன்ற துணைத் தலைவர் எம்.சுதர்ஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ், நகரப் பொருளாளர் கே.ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.