ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
இடைத்தேர்தலையொட்டி கட்சிகள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் தரப்பிலும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க | மெரீனாவில் பேனா சின்னம் அமைக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
இதில், இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இபிஎஸ் தரப்பு வழங்கிய பட்டியலில் இடம்பெற்றவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரின் தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ் அளித்த ஆதரவு கடிதத்தின்படி தேர்தல் ஆணையம் இபிஎஸ் தரப்பு வேட்பாளரை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.