மாவட்ட உறைவிட மருத்துவப் பயிற்சி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

முதுநிலை மருத்துவத்தில் சமூக சுகாதாரத் துறை மாணவர்கள் மாவட்ட உறைவிட மருத்துவ பயிற்சியை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில் சில முக்கிய அறிவுறுத்தல்களை
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read


சென்னை: முதுநிலை மருத்துவத்தில் சமூக சுகாதாரத் துறை மாணவர்கள் மாவட்ட உறைவிட மருத்துவ பயிற்சியை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில் சில முக்கிய அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகளின்படி, முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பின் ஒருபகுதியாக ஏதாவது மாவட்டத்திலோ, ஊரகப் பகுதியிலோ 3 மாதங்கள் தங்கியிருந்து மருத்துவப் பயிற்சிகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் இந்த நடைமுறை செயல்படுத்தாமல் இருந்த நிலையில், நிகழாண்டில் அந்த விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதுநிலை மருத்துவத்தில் தங்களது துறை சார்ந்த மருத்துவ பயிற்சிகளை பிற மாவட்டங்களுக்குச் சென்று மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், சமூக சுகாதாரத் துறையை (கம்யூனிட்டி மெடிசன்) சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு பொது சுகாதாரத் துறையின் கீழ் அந்த மருத்துவப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

அதற்காக சில அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
புதிய விதிகளின்படி சமூக சுகாதாரத் துறை முதுநிலை மருத்துவ மாணவர்கள், தங்களது 3 அல்லது 4 அல்லது 5}ஆவது பருவத்தின்போது (செமஸ்டர்) மாவட்ட உறைவிட மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள் ஆகியவற்றில் அவர்களை பயிற்சிக்காக நியமிக்க வேண்டும். மாவட்ட அளவில் சுகாதார கட்டமைப்புகள் எவ்வாறு உள்ளன, அங்கு எத்தகைய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, மக்களுக்கான மருத்துவத் தேவை என்ன என்பதை இதன்மூலம் அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியே திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இதைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் தொடர்பு அதிகாரிகளை நியமித்தல் அவசியம். மேலும், முதுநிலை மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறும் காலத்தில் அவர்களுக்கான உறைவிட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

மாவட்ட உறைவிட மருத்துவப் பயிற்சி தொடர்பான விவரங்களையும், தகவல்களையும் அவ்வப்போது அனுப்ப 
வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com