கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் உடலை கூறாய்வு செய்ய உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்
தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் கடந்த 14-ஆம் தேதி பரிசலில் சென்ற சிலா், கா்நாடக வனப்பகுதியில் உள்ள மான்களை வேட்டையாடி உள்ளனா். அப்போது, துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த கா்நாடக வனத்துறையினா், வேட்டைக்காரா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், கோவிந்தபாடியைச் சோ்ந்த காரவடையான் (எ) ராஜா (40) என்பவர் காணவில்லை.
வெள்ளிக்கிழமை காலை பாலாற்றங்கரையில் சொறிபாறை அருகே ராஜாவின் உடல் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. இதனால் இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடற்கூராய்வு முடிந்த நிலையில், உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க- தில்லி மேயர் தேர்தலை பிப்.22-ல் நடத்த ஒப்புதல்
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக மீனவர் உடலை வாங்க மறுத்து உறவிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு கர்நாடக அரசிடமிருந்து ரூ.50 லட்சம் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும். மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கர்நாடக வனத் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே உயிரிழந்த மீனவரின் மனைவி - உறவினர்களுடன் காவல் துறை அதிகாரிகள் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் பயனாக மீனவர் ராஜாவின் உடலை கூறாய்வு செய்ய உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர் உடலை உடற்கூராய்வு செய்ய உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.