போடி: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஞாயிரன்று, போடி கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு சம்பந்தப்பட்ட போடி அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள், மகா தீபாராணை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தெய்வங்களுக்கு மலர் அங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பூஜை ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஸ்ரீநிவாசவரதன் என்ற கார்த்திக் ஆகியோர் செய்திருந்தார்.
இதேபோல், இந்து சமய அறநிலையத்துறைக்கு சம்பந்தப்பட்ட போடி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலும், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை தெய்வங்களுக்கு தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது.
போடி வினோபாஜி காலனியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சிவலிங்க பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 9 வகை தீபங்களால் தீபாராதணை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சங்கரநாராயணன், பஞ்சலிங்கங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் உலக அமைதி, இயற்கை வளம் வேண்டி 108 காசுகள் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
போடியில் உள்ள தென்திருவண்ணாமலை என்றழைக்கப்படும் அருள்மிகு பரமசிவன் மலைக்கோவில், பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோயில், பெரிய சவுடம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பெண்கள் பலர் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
தேவாரம் ரெங்கநாத பெருமாள் கோவில், சிலமலை பெருமாள் கோவில், தீர்த்தத் தொட்டி ஆறுமுகநாயனார் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
போடியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களிலும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிருஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
சாலைகளில் புத்தாண்டை கொண்டாடிய இளைஞர்கள்: போடியில் சனிக் கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் சாலைகளில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் ஹேப்பி நியூ இயர் என சாலைகளில் சத்தமிட்டபடி சென்றனர். இதனையொட்டி போடி நகர் பகுதியில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். .