ஓசூர்: தமிழக எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரி, ஒசூரில் இருந்து கர்நாடகத்திற்கு கடத்தப்படும் எம் சாண்ட் மணலை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஒசூர் சிவில் அசோசியேஷன் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நாள்தோறும் இரவு நேரங்களில் 2000-க்கும் மேற்பட்ட லாரிகளில் தமிழக எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரி, ஒசூரில் இருந்து கர்நாடகம் மாநிலத்திற்கு எம் சாண்ட், பீ.சாண்ட் ஜல்லி மணல் ஆகியவை கடத்திச் செல்வதால் தமிழகத்தில் கட்டுமான பொருள்களின் விலை அதிகரித்து வருவதாக ஒசூர் சிவில் அசோசியேசன் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் வியாழக்கிழமை ஒசூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கட்டுமான பொருள்கள் மணல் எம்சாண்ட் ஜல்லி போன்றவை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக குவாரி உரிமையாளர்கள் தங்கள் சொந்த லாரிகளில் தமிழக எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இரவு நேரங்களில் 2000-க்கும் மேற்பட்ட லாரிகளில் எம் சாண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றை கடத்திச் செல்கின்றனர். இதனால் தமிழகத்தின் கட்டுமான பொருள்களின் விலை அதிகரித்து உள்ளது. இது மாவட்ட நிர்வாகத்திற்கு காவல்துறைக்கும் தெரிந்தே நடைபெறுகிறது. இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சிவில் அசோசியேஷன் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | கனிமொழி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
மேலும், ஒசூர் நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி 780 சதுர கிலோமீட்டர் அளவிற்கு விரிவடைந்துள்ளது. ஒசூர் தொழில் நகரில் பல்வேறு பெரும் தொழிற்சாலைகள் வந்த வண்ணம் உள்ளன. இங்கு கட்டுமானங்கள் அதிக அளவு நடைபெற்று வருவதால் கட்டுமான பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, கர்நாடக மாநிலத்திற்கு கட்டுமான பொருள்களை கடத்துவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறினார்.
இந்த செய்தியாளர்களின் சந்திப்பின்போது செயலாளர் வெங்கட்ரமணி, பொருளாளர் செந்தில்குமார், முன்னாள் தலைவர் நடராஜன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.