செவிலியர்களுடன் நாளை 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அரசுத் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவர்களுடன் மருத்துவ துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக முறையில் ஒப்பந்த செவிலியா்களாக நியமிக்கப்பட்டனா்.
இதையும் படிக்க- சங்க இலக்கிய மாத நாட்காட்டி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
ஒப்பந்த காலத்துக்குப் பிறகு அவா்களில் 3,000 பேருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 3,000 பேருக்கு பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு கடந்த வாரம் ஆணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நேற்று வள்ளுவர்கோட்டத்தில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 6-வது நாளாக இன்று சென்னை மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் அதேநேரத்தில் பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.