தமிழ்நாடு, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை உச்சரிக்க மறுத்த ஆளுநர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு என்று வார்த்தை இடம்பெற்ற ஒவ்வொரு வாசகத்தையும் ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்துவிட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு என்று ஆர்.என். ரவி குறிப்பிட்டிருந்தார். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது.

ஆளுநர் வாசிக்கத் தவிர்த்த வாசகங்களில், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்கை நிலைப்பாட்டுடன் செயல்படும் இந்த அரசு, தமிழ்மொழியின் உரிமையைக் காக்கும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

சட்டப்பேரவையில்  இன்று உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு என்ற வார்த்தையுடன் திராவிட மாடல் என்ற வார்த்தையை படிக்காமல் புறக்கணித்ததால் அவையிலேயே சர்ச்சை வெடித்தது.

அது மட்டுமல்லாமல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா என தமிழகத்தின் மிக முக்கிய தலைவர்களின் பெயர்களையும் அவர் உச்சரிக்கவில்லை.

பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை என்று திமுக தலைமையிலான அரசு வழங்கியிருந்த நிலையில், அதனை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார் ஆளுநர்.

மேலும், சமூக நீதி, மதநல்லிணக்கம் போன்ற வார்த்தைகளையும் வாசிக்காத ஆளுநர், தமிழகத்தில் சட்டம் -  ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்ற வாசகத்தையும் படிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆளுநர் வாசிக்க தவிர்த்த ஒவ்வொரு வாசகத்திலும் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததாகவும், திராவிட மாடல் பாதையில் தமிழ்நாடு அரசு நடைபோடுகிறது என்ற வாசகத்தையும் படிக்காமல் தவிர்த்தார் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு என்ற இடத்தில் எல்லாம் இந்த அரசு என்று ஆளுநரே தாமாக மாற்றிப் படித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஆளுநரின் இந்த உரைக்கு, பேரவைக் கூட்டத்திலேயே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனத்தைப் பதிவு செய்தார். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாகப் படிக்கவில்லை. அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்று பேரவையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

ஆளுநரின் உரைக்கு பேரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநரின் செயலை முதல்வர் பேரவையிலேயே விமரிசித்துப் பேசினார். இதனால், கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.

ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற இடத்தில் இந்த அரசு என்று மாற்றியும், பல தமிழ்நாடு அரசு என்ற வார்த்தை இடம்பெற்ற வாசகங்களைத் தவிர்த்தும், திராவிட மாடல் என்ற வார்த்தை இடம்பெற்ற வாசகங்களைத் தவிர்த்தும் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று உரையாற்றியிருந்ததற்கு பல்வேறு தரப்பிலும் விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஆளுநர் உரையில், சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது என்பதையும் ஆளுநர் வாசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com