/

மாணவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்: மழைக்காலம் முடிகிறதாம்!

வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:41 pm

DIN

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அதிர்ச்சி தரும் தகவலாக, வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்காலம் என்றாலே, மாணவ, மாணவிகளுக்கு கொண்டாட்டம்தான். மழை பெய்தாலும் சரி பெய்யப்போகிறது என்று அறிவிப்பு வெளியானாலும் சரி.. சற்று நேரத்தில் விடுமுறை அறிவிப்பும் வந்துவிடும் என்று தொலைக்காட்சிகள் முன்பு தவம் இருப்பார்கள். இப்போதெல்லாம் ஒரு படிமேலே சென்று நேரடியாக மாவட்ட ஆட்சியர்களுக்கே விடுமுறை அறிவிக்கும்படி ஆலோசனை சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள்.

இது எல்லாம் இன்றோடு முடிவுக்கு வருகிறது. அதாவது, வடகிழக்குப் பருவமழை ஜனவரி 12ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகம் மற்றும் கேரள பகுதிகளிலிருந்து விகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பெய்யவில்லை. அடுத்த 24 மணி நேரத்துக்கும் மழைக்கான அறிவிப்பு இல்லை. வறண்ட வானிலையே தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைபெறும் வடகிழக்குப் பருவமழை எப்படி இருந்தது?
வடகிழக்குப் பருவமழை எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, 
நவம்பர் 1ஆம் தேதி முதல் உருவான அனைத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் மேற்கு - வடமேற்காகவே நகர்ந்தன. கிறிஸ்துமஸ் நாளில் உருவானது மட்டுமே சற்று தெற்கு நோக்கி நகர்ந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, வட தமிழகம் (சென்னை), வட உள் தமிழகம் (கிருஷ்ணகிரி) உள்ளிட்டவை நல்ல மழையை பெற்றன. ஆனால், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு அவ்வளவாக மழை வாய்ப்பு கிடைக்கவில்லை. 

கொடுத்து வைத்த ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வாழ்நாளில் முதல் முறையாக வடகிழக்கு பருவமழை 58 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவை கொடுத்துள்ளது. வழக்கமாக கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகள் குறைவான மழையைத் தான் பெறும். ஆனால் இம்முறை அதிகப்படியான மழையை பெற்றுள்ளன. கோவையும் கூட 38 சதவீத அதிக மழையைப் பெற்றுள்ளது. நீலகிரியில்தான் 13 சதவீத மழை குறைவு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.