சென்னை: சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) பொது மேலாளர் அறையில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழர் திருநாளன்று பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும் முதன்மை தேர்வு நாளில் நடைபெற உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேர்வு தேதியை மாற்றக்கோரி அனைத்து தரப்பிலும் குரல்கள் வலுத்து வருகிறது.
எஸ்பிஐ வங்கி அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.
இதையும் படிக்க | பொங்கல் பண்டிகை: தேவைக்கேற்ப மெட்ரோ ரயில் இயக்கப்படும்!
இந்நிலையில், தமிழர் திருநாள் அன்று நடைபெற உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் தேர்வினை மாற்றிடக்கோரி வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் எஸ்பிஐ வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். உடன் வடசென்னை மாவட்ட செயலாளர் எல். சுந்தர்ராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வார் ஆகியோர் உள்ளனர்.
தேர்வுத் தேதிகளை மாற்றும் வரை போராட்டம் ஓயாது என தெரிவித்தனர்.