ஈரோடு: அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பு என்றும் கடந்த 18 மாதங்களில் நாங்கள் செய்த சாதனைகளின் அடிப்படையில்தான் வாக்கு கேட்கிறோம் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, ஈரோடு பெரியார் நகரில் காங்கிரஸ் வேட்பாளருக்கான (இன்னும் அறிவிக்கப்படாத) தேர்தல் பிரசாரத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த தொகுதியை காங்கிரஸுக்கு முதல்வர் ஒதுக்கியுள்ளார். அக்கட்சியின் வெற்றிக்காக பாடுபட உள்ளோம்' என்றார்.
சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு, 'அவர்கள் அரசை விமர்சிப்பது இயற்கையானது. உண்மையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவு வரி உயர்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர். இப்போது, கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம்' என்று கூறினார்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் எங்கள் அணி போட்டி: ஓபிஎஸ் அறிவிப்பு