ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சியினரான பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்திக்கவுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம்: ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி அணி தங்கள் தரப்பு போட்டியிடும் என்று கூறிய நிலையில் ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு ஜி.கே.வாசனையும், மாலை 4 மணியளவில் பாஜக தலைவர் அண்ணாமலையையும் சந்திக்க உள்ளனர்.
தொடர்ந்து பாமக தலைவர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியை சந்திக்கவுள்ளனர்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் எங்கள் அணி போட்டி: ஓபிஎஸ் அறிவிப்பு