ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு!
எடப்பாடி பழனிசாமி அணி தங்கள் தரப்பு போட்டியிடும் என்று கூறிய நிலையில் ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அந்த கட்சியைச் சேர்ந்த ஒருவரையே பேரவை உறுப்பினராக்கிவிடலாம் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சனிக்கிழமை பாமக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பாமக போட்டியுமில்லை, ஆதரவுமில்லை என அன்புமணி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.