உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வழங்கப்படும்: தலைமை நீதிபதி பேச்சுக்கு மோடி பாராட்டு!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒவ்வொரு இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அதன் நகல்கள் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட்
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வழங்கப்படும்: தலைமை நீதிபதி பேச்சுக்கு மோடி பாராட்டு!
Published on
Updated on
1 min read

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒவ்வொரு இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அதன் நகல்கள் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 

மகாராஷ்டிரம் மற்றும் கோவாவின் பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்று பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தின் விசாரணை நேரலையாக வெளிவரும்போது, அதனை கவனிக்கும் சட்டத் துறை ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்கள் விவாதத்தில் ஈடுபடலாம். இதுபோன்ற நேரலை காட்சி விவரங்களை விவாதிக்கும்போது நமது சமூகத்தில் ஊடுருவி உள்ள அநீதியை நீங்கள் உணர முடியும் என்றார். 

தொடர்ந்து, "எங்களது அடுத்தக்கட்ட பணியானது, ஒவ்வொரு இந்திய மொழியிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் மொழிபெயர்க்கப்பட்ட நகல்களை வழங்குவதாகும். நமது குடிமக்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியில், அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் நீதிமன்ற தீர்ப்புகள் சென்றடையாவிட்டால், நாங்கள் மேற்கொள்ளும் பணியானது 99 சதவீத மக்களை சென்றடையாது. எனவே நான் தொழில்நுட்பத்தை நம்புகிறேன்... நீங்கள் தொழில்நுட்பத்தை பின்பற்றும்போது எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அளவு விமர்சனம் இருக்கும். தொழில்நுட்ப பிளவு உள்ளது. தொழில்நுட்பத்தை அணுக முடியாதவர்களை விட்டுவிட்டோம், ஆனால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான எனது நோக்கம் தொழில்நுட்பம் அணுகல் இல்லாதவர்களைச் சென்றடைய வேண்டும், எனவே தொழில்நுட்பத்தின் மூலம் அணுகுவதற்கு மேலும் தடைகளை உருவாக்கக்கூடாது என்று கூறினார். 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஒவ்வொரு இந்திய மொழியிலும் மொழிமாற்றம் செய்யவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் வலியுறுத்தும் தலைமை நீதிபதியின் பேச்சுக்கு வரவேற்பு, பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், அவர் பேசிய விடியோ பதிவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை இந்தியாவின் பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கு உழைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார். அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது பாராட்டத்தக்க சிந்தனை. இது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும்."

மேலும், "இந்தியாவில் பல மொழிகள் உள்ளன, அவை நமது கலாசார துடிப்போடு சேர்ந்தது. மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்வியை ஒருவரின் தாய்மொழியில் படிக்கும் வகையில் வழங்குவது உள்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது," என்று மோடி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com