திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நி்கழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
Published on
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நி்கழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

கோயிலின் கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பை புல், மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. 

முன்னதாக உற்சவர் சன்னதியிலிருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம்,சேஷ வாகனம், தங்க மயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இவ்விழாவில், ஜன.30 ஆம் தேதி தை கார்த்திகை நாளில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜன.31 ஆம் தேதி காலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 

அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com