நல்லகண்ணைச் சந்தித்து நலம் விசாரித்தார் மா. சுப்பிரமணியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 
நல்லகண்ணைச் சந்தித்து நலம் விசாரித்தார் மா. சுப்பிரமணியன்
நல்லகண்ணைச் சந்தித்து நலம் விசாரித்தார் மா. சுப்பிரமணியன்


நுரையீரல் தொற்று பாதிப்பால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

தற்போது நல்லகண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் வீடு திரும்பலாம் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணை மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில்  சந்தித்து நலம் விசாரித்தார்.

 மேலும்  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேச கூட்டுறவுத்துறை அமைச்சரின் உறவினரையும் அமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், விடுதலைப் போராட்ட வீரரான மதிப்பிற்குரிய நல்லகண்ணு அவர்களுக்கு நுரையீரல் நோய் தொற்று ஏற்பட்டு கடந்த நான்கு, ஐந்து நாள்களாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தொடர்ந்து விசாரித்து வருகிறார். 

இந்த நிலையில் இன்று அவரை நேரடியாக கண்டு நலம் விசாரித்தோம். இன்னும் ஓரிரு நாள்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று அவர் வீட்டிற்கு செல்லலாம். அவரது உடல் நலம் தற்போது குணமாகி சீராக உள்ளது என தெரிவித்தார்.

இதே போல் கடந்த 15 நாள்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த உத்தரப்பிரதேச கூட்டுறவுத் துறை அமைச்சரின் உறவினர் சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நுரையீரல் கோளாறு ஏற்பட்டு மூச்சு திணறலின் காரணமாக மயக்கமுற்று மிக ஆபத்தான நிலையில்  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

78 வயதான அவர் ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று பூரண  நலம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் சீர்காழியைச் சேர்ந்த அபிநயா என்கின்ற 13 வயது சிறுமி எஸ்எல்இ என்கின்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சீர்காழி போன்ற பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்று வந்த அவரின் இரு கால்களையும் நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில்  தந்தையை இழந்த அந்த குழந்தை தனது கால்களை எடுக்காமல் சரி செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தது.

தற்போது அந்த குழந்தைக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கால் விரல்களில் மட்டும் நோயின் பாதிப்பு கூடுதலாக இருக்கிற காரணத்தினால் விரல்கள் உதிர்ந்து போய் காணப்பட்டது. மேலும் கால்கள் நன்றாகத்தான் உள்ளது. குழந்தையின் தாயாருக்கு இங்கேயே தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

குழந்தையின் சிகிச்சைக்கு பின்னர்  ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரத்தியேகமான காலணியையும் துறையின் சார்பாக குழந்தைக்கு வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com