சேலம் மாவட்டம், வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பஞ்ச பாண்டவர்களான தருமர், அர்ஜூணன், பீமன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரெளபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு கிராம மக்களிடையே முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரளெபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்பதும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோயில்களிலுள்ள சுவாமிகளையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்துச் செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.