துறையூர் அருகே கணவன் - மனைவி கொலை

துறையூர் அருகே மர்ம நபர்களால் கணவன் மனைவி கொல்லப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

துறையூர்: துறையூர் அருகே மர்ம நபர்களால் கணவன் மனைவி கொல்லப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனபுரத்தில் வசிப்பவர் தங்கவேலு மகன் ராஜ்குமார்(29). இவரது மனைவி சாரதா (19). இவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய சொந்த ஊர் துறையூர் அருகேயுள்ள பி மேட்டூர் கிராமம்.

திருமணத்திற்கு பின்னர் ராஜ்குமார் சோபனபுரம் விஜயசேகரின் வயலைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதால் கணவனும் மனைவியும் சோபனபுரத்தில் தங்கினராம். 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வெளியே கட்டிலில் உறங்கிய  போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலை இருவரும் தலையில் காயங்களுடன் சடலங்களாக கட்டிலில் கிடந்தனர். 

இது தொடர்பாக உப்பிலியபுரம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தகவலறிந்து திருச்சி மாவட்ட காவலர் எஸ்பி சுஜித் குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர். 

திருச்சியிலிருந்து தடயவியல் மற்றும் விரல்ரேகை நிபுனர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யாரென காவல் துறையினர்  விசாரித்து வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com