மணப்பாறையில் வணிகவரி அலுவலர் கைது!
மணப்பாறையில் வணிகவரி அலுவலர் கோவிந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகை பட்டறை என்ற கடை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார். இவரால் செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டி உள்ளது. அதற்காக தனது கடையின் பெயரில் ஜிஎஸ்டி சான்றிதழ் வேண்டி மணப்பாறையில் உள்ள வணிகவரி அலுவலகத்திற்கு கடந்த 25.06.2023 அன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
வணிகவரித் துறையில் இருந்து ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்குவதற்கு அரசு கட்டணம் எதுவும் பெறப்படுவது கிடையாது. சேசுவின் விண்ணப்பத்தின் பேரில் 04.07.2023 அன்று வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து சேசுவின் கடையை சென்று ஆய்வு செய்துவிட்டு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கூறியுள்ளனர்.
அன்று மாலையே சேசு மணப்பாறையில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி என்பவரை சந்தித்து தனது கடைக்கு ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்குமாறு கூறியுள்ளார். வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி சேசுவிடம் ரூ.2000 பணம் கொடுத்தால் ஜிஎஸ்டி சான்றிதழ் உங்களது கடைக்கு வழங்குவோம் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.
இதையும் படிக்க: அண்ணா சாலையில் ரூ.621 கோடியில் மேம்பாலம்: அரசாணை வெளியீடு
லஞ்சம் கொடுக்க விரும்பாத சேசு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்று காலை அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் சேவியர் ராணி ஆகியோர் கொண்ட குழுவினர், தற்போது சேசுவிடமிருந்து வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி ரூ.2000 லஞ்சமாக பெற்ற போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.