தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரும் சட்டப் பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் தனக்கு ஜீவனாம்சம் தர மறுப்பதாக அவரது முன்னாள் மனைவி காயத்ரி பரமசிவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்து வருபவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான தி.வேல்முருகன். இவருக்கும் காஞ்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகள் காயத்ரி என்பவருக்கும் கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்த இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதுடன் காயத்ரிக்கு ஜீவனாம்சமாக மாதம் தோறும் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. நீதிமன்றம் உத்தரவின்படி மாதம் ரூ.25 ஆயிரத்தை வேல்முருகன் தர மறுப்பதாக காயத்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. எம்எல்ஏ வேல்முருகனும், முன்னாள் மனைவி காயத்ரியும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகினர்.
நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் காயத்ரி செய்தியாளர்களிடம் கூறியது, கடந்த 1999 ஆம் ஆண்டு எனக்கும் வேல்முருகனுக்கும் திருமணம் நடந்தது. சென்னை வளசரவாகத்தில் எனது பெயரில் உள்ள வீட்டையும் என் தந்தை அவருக்கு கொடுத்தார். ஆனால் வீடு எனது பெயரிலேயே உள்ளது. விவாகரத்து ஆன பிறகு அந்த சொத்தை திருப்பிக் கேட்டால் கொடுக்க மறுக்கிறார். அது மட்டுமின்றி ஜீவனாம்சம் தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகை ரூ.25 ஆயிரத்தையும் தர மறுத்தும் என்னை அச்சுறுத்தியும் வருகிறார்.
தந்தையின் உடல்நிலைக்காக என் சொத்தை விற்கவும் பல தடைகளை தொடர்ந்து செய்து வருகிறார். என்னிடம் இருந்த நகைகள், சொத்துகள், பணம் ஆகியனவற்றை வாங்கிக்கொண்டு தர மறுக்கிறார் எனவும் காயத்ரி புகார் தெரிவித்தார்.