திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன் விரோதத்தில் ஐஸ் வியாபாரி, அவரது மகனை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் முதியவர் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கரும்புளிப்பட்டியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி குப்புசாமி(56). இவருடைய சகோதரி முருகாயியின் பேத்தி பூஜா(22). கரூர் மாவட்டம் தேவர் மலையைச் சேர்ந்த ஜீவா, கரும்புளிப்பட்டியில் உள்ள தனது தாத்தா தாதன் வீட்டிற்கு வந்த நிலையில் பூஜாவுடன் பழகி காதலித்ததாக கூறப்படுகிறது. ஜீவா தகாத போதை பொருட்களுக்கு அடிமையாகி இருந்ததால், குப்புசாமியும் அவரது மகன் மாரிமுத்துவும் ஜீவாவை கண்டித்து உள்ளனர்.
இதில், ஜீவா தரப்புக்கும் குப்புசாமி குடும்பத்தினருக்கும் கடந்த ஜனவரி மாதம் தகராறு ஏற்பட்டுள்ளதாம். அதனைத் தொடர்ந்து சொந்த வீட்டை விட்டு குப்புசாமி தன் மகன் மாரிமுத்துடன் அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை குப்புசாமி, அவரது மனைவி சீரங்கம்மாள், மகன் மாரிமுத்து ஆகியோர் இரண்டு இருசக்கர வாகனத்தில் கரும்புளிபட்டியில் உள்ள தங்களது தோட்டத்தில் பருத்தி எடுப்பதற்காக சென்று உள்ளனர்.
திடீரென மழை தூரவே பருத்தி எடுப்பதை விட்டுவிட்டு மீண்டும் பொத்தமேட்டுப்பட்டிக்கு இருசக்கர வாகனங்களில் திரும்பிக்கொண்டிருந்த குப்புசாமி - மாரிமுத்துவை, மணப்பாறை - குளித்தலை சாலை கலிங்கப்பட்டி பிரிவு அருகே வழி மறித்த 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சாரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளது.
இதில் தலையில் பலத்த வெட்டு காயத்துடன் குப்புசாமி நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்ட மாரிமுத்து மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலில் ஜீவா சகோதரர் பிரவீன் மற்றும் கரும்புளிபட்டியைச் சேர்ந்த 5 இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கனவே இருத்தரப்பிலும் உள்ள பிரச்னை குறித்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணை நடைபெறவுள்ள நிலையில், ஜீவா தரப்பினர் இந்த கொலையினை செய்துள்ளனர்.
முதியவர் கொலை சம்பவம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன், ஆய்வாளர் ஜே.கே.கோபி ஆகியோர் தலைமையிலான மணப்பாறை போலீஸார் நிகழ்விடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரால் முதியவர் குப்புசாமி உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.