புதுச்சேரி அருகே பேருந்து-கார் மோதல்: ஒருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்
புதுச்சேரி அருகே திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டிவனம் பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த விஜயகுமார் என்ற தனியார் பேருந்து பட்டானுர் அருகே சென்று கொண்டிருந்தது. இதேபோன்று புதுச்சேரியில் இருந்து ஜவகர் நகரைச் சார்ந்த சத்தியமூர்த்தி தனது மனைவியுடன் கூட்ரோடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டாணுர் பகுதியில் சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை திருப்பியபோது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி எதிரே வந்த கார் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணித்த ஜவஹர் நகரைச் சார்ந்த சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி இறந்தார். மேலும் அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.