சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவை செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர் என்கிற ஏஜெண்டுகளை இறக்கி இணையாட்சி செய்யும் வேலையை மத்திய அரசு செய்கிறது.
எந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் சர்ச்சையான கருத்தை, பரபரப்பை உருவாக்கி, நெருக்கடியை ஏற்படுத்தும் வேலைகளை ஆளுநர்கள் செய்கிறார்கள். அதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்.,பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி என்ன புத்தரா? - அண்ணாமலை கேள்வி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பணி என்பது அரசமைப்புச் சட்டப்படியாக இருப்பதை, இயங்குவதை கவனிப்பதே அவரின் முக்கியமான பணி. ஆனால் அதைச் செய்யாமல் தேவையில்லாத அரசியல் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வளவு சர்ச்சையாக பேசியதில்லை.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார், இந்த புகார் கடிதத்தின் மீது குடியரசுத் தலைவர் விரைந்து ஒரு நல்ல முடிவெடுத்து தமிழ்நாட்டில் தொடர்ந்து குழப்பம் விளைவித்துவரும் ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.