ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17(திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாகும். எனவே, ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாணவர்களின் நலன் கருதி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜூலை 22-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.