புதுச்சேரி: மாணவர்களுக்கு உதவும் நடிகர் விஜய்க்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு அரசியல் செய்யுங்கள் என காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, பேச்சு உரிமை என்பது அனைவருக்கும் உண்டு. நான் எவ்வளவு பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் முடிவு செய்ய முடியாது. அவர் சொல்வதை அவரது கட்சிக்காரர்களே கேட்க மாட்டார்கள். நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும், கேட்காமல் போனால் போகட்டும் என்றார்.
இதையும் படிக்க | ஒவ்வொரு ஆண்டும் பாம்புக் கடியால் இத்தனை உயிரிழப்புகளா?
மேலும் மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்வதை பாராட்டுகிறீர்களா? என்ற கேள்விக்கு, இதை அரசியலாக பார்க்கவில்லை. படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பவர்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுத்தால் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என நினைக்கிறார்கள். சமுதாயத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதை நான் பாராட்டுகிறான்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிர் கொள்கையில் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்தால் பாராட்டுவேன். அதில் உள்ள உள்நோக்கம் இல்லை என தமிழிசை தெரிவித்தார்.