சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், கணினியை ஆய்வு செய்ய தடயவியல் நிபுணர்கள் வந்துள்ளனர்.
சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கெளதம சிகாமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் உள்ள கணினிகளில் ஏதேனும் ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதா என்று தடயவியல் நிபுணர்களை கொண்டு அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் 2006 - 2011 வரையிலான காலத்தில் செம்மண் குவாரியில்அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28 கோடியளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான பொன். கௌதமசிகாமணி, கட்சி நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன் ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இதையும் படிக்க | எங்களுக்காக அமலாக்கத்துறை தேர்தல் பிரசாரம்: முதல்வர் ஸ்டாலின்
இந்த வழக்கில் தங்களை விடுவிக்கக் கோரி எம்.பி.பொன்.கெளதமசிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் கடந்த ஒரு மாதம் முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஏதும் நடைபெற்றிருக்கிறதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.