திருச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலையில் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின், கோயிலில் உள்ள அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் கோயில் உள்பிரகாரத்தில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார்.
தங்கத் தேரில் அமர்ந்திருந்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது துர்கா ஸ்டாலின் தீபாராதனையை தொட்டு வணங்கினார்.
இந்நிகழ்வில் கோயில் இணை ஆணையர் கல்யாணி, கோயில் பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.