திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரர்-பரவை நாச்சியார் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வாக, சுந்தர மூர்த்தி நாயனாருக்கும், பரவை நாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதன்படி நிகழாண்டு சுவாதி விழாவில் சுந்தரர் -பரவை நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக நிறைகுடம் கொடுத்து புதுத்தெரு நாலுகால் மண்டபத்திலிருந்து சுந்தரர் அழைத்து வரப்பட்டார். இதைத்தொடர்ந்து பரவை நாச்சியார் திருமாளிகையில் இருந்து புறப்பட்டு வந்தார். இதையடுத்து தியாகராஜ சுவாமி முன்னிலையில் நம்பி ஆரூராருக்கும், பரவை நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் உற்சவம் சிறப்பாக நடந்தேறியது.
மேலும், நிகழ்வையொட்டி பிற்பகல் 3 மணிக்கு பரவை நாச்சியாா் கோவிலில் சுந்தரருக்கும் பரவை நாச்சியாருக்கும் சிறப்பு அபிஷேகம், மாலை 6.30-க்கு நம்பி ஆரூரார் 63 நாயன்மார்களுடன் தேரோடும் வீதியில் நாதஸ்வர இசையுடன் வீதியுலா ஆகியவை நடைபெற உள்ளன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.