அவிநாசி: ஊத்துக்குளி அருகே பள்ளகவுண்டபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பள்ளி சகோதரிகள் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பள்ளகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் புபேஷ் குமார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கனிஷ்கா (11), சஸ்விகா (7) என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவரும் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு, 2 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை இரு குழந்தைகளையும், இவர்களது உறவினர் தங்கராஜ் (60) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க | மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு!
பள்ளகவுண்டம்பாளையம் அருகே கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கனிஷ்கா, சஸ்விகா ஆக இருவரும் லாரியில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பலத்தகாயமடைந்த தங்கராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.