வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் இரண்டு தங்க பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவுற்றன. இந்நிலையில் அதில் 3,254 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக அதேப் பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மேலும் இதேப் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி துவங்கப்பட்டு 8-குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
அங்கு இதுவரை 1700 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2-கிராமில் தங்கப்பட்டையும் 2.2 கிராமில் குமிழ் வடிவ தங்க அணிகலனும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பண்டைய கால மக்கள் தங்க பொருள்களை பயன்படுத்தியிருப்பதும் நவநாகரீக வாழ்க்கையை வாழ்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அகழாய்வு பணிகள் புதிய உத்வேகத்துடனும் ஆர்வத்துடனும் நடைபெற்று வருகிறது.