நாதன்கோயில் என்ற ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான் செண்பக வள்ளி சமேத ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமுமாக உள்ளது.
இத்தகைய பெருமை பெற்ற வைணவ தலத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலை - மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. மேலும் திருக்கல்யாணமும், கட்டு தேரோட்டம் நடைபெற்றது.
வைகாசி பிரம்மோற்சவ நிறைவு நாளான செண்பகவல்லி தாயார் சமேதராய் ஜெகந்நாதப் பெருமாள் சிறப்பு பட்டாடை, விசேஷ மலர் அலங்காரத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். அங்கு முதலில் பால ஜெகநாத சுவாமிக்கும் தேன், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம், என பலவிதமான பொருட்களை கொண்டு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு, பட்டாட்சாரியாகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித காவரியாற்று நீர் நிரப்பிய அண்டாவில், பால ஜெகநாத சுவாமியை பட்டர் மும்முறை முங்கி எடுக்க, வைகாசி பிரம்மோற்சவ தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர் ஸர்வதர் திருமஞ்சனம் ஸப்தாவரணம், புஷ்ப யாகத்துடன் இவ்வாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.