
அண்ணாமலை அறியாமல் பேசுகிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தது:
அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அவர் திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார். தமிழ்நாடு அரசியல் வரலாறு, ஜெயலலிதாவின் மாபெரும் ஆளுமை போன்றவற்றையெல்லாம் தெரியாமல், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்.
கடந்த 1991 - 96 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா மீது 49 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இது, அகில இந்திய அளவில் நடைபெற்ற சதி என்பது எல்லோருக்கும் தெரியும்.
அண்ணாமலை இருக்கக்கூடிய பாஜக 1998 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலும், குறிப்பாக தென்னாட்டிலும் காலூன்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் ஜெயலலிதாதான்.
வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் ஜெயலலிதா மீது மிகுந்த அன்புடனும், நட்புடனும் இருந்தனர். ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால சாதனையைக் கண்டு அஞ்சி, காழ்புணர்ச்சி காரணமாக அவர் மீது வழக்கு போடப்பட்டது. எனவே அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார்.
செந்தில் பாலாஜி எனது பழைய நண்பர். அமைச்சராக உள்ள அவர் மீது 2 ஆண்டுகளாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை இருந்து வந்த நிலையில், இப்போது அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பொதுக் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றார் தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.